கரோனா நோய்த் தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கட்டுப்பாட்டை மீறி வெளியே வருபவர்களைக் காவல் துறையினர் எச்சரித்தும், வழக்குகள் பதிவு செய்தும் வருகின்றனர்.
இதனிடையே, புதன்கிழமை புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நிலையில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் அவரது வீட்டின் அருகே உள்ள பொது மக்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை இலவசமாக விநியோகம் செய்தார்.
இந்நிலையில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது சமூல வலைத்தளத்தில் சட்டமன்ற உறுப்பினர் குறித்து தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார், அதில், "சட்ட விதிமுறைகளை மீறியதால் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் நோய்த் தொற்று தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது வீட்டின் வெளியே 200க்கும் மேற்பட்டவர்களை அழைத்துத் தனிப்பட்ட முறையில் பொருட்களை விநியோகம் செய்தது சட்டமன்ற உறுப்பினரின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது.
ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொதுமக்களுக்கு ஊடகங்கள் மூலமாக அறிவுறுத்தப்பட்ட நிலையில், ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர் இவ்வாறு வீதி மீறலில் ஈடுபட்டுள்ளார். ஆகவே, சட்டவிதியை மீறியதால் அவர் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் நோய்த் தொற்று தடுப்பு சட்டத்தின் கீழ் குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து பொதுமக்களிடத்தில் காவல்துறை மூலமாகவும், ஊடகம் மூலமாகவும் அறிவுறுத்தப்பட்ட போதிலும், அதனைப் பொருட்படுத்தாமல் சட்டத்தை மீறியதால் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது," எனக் கிரண்பேடி பகிர்ந்துள்ளார்.