பெங்களூரு: கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய சிகிச்சை முறையைக் கண்டுபிடித்துள்ளதாக இந்திய மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா இந்தியாவிலும் நாளுக்கு நாள் தனது கோர தாண்டவத்தைத் தீவிரப்படுத்தி வருகிறது. இதையடுத்து ஏப்ரல் 14 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஒரு சிறந்த சிகிச்சையைக் கண்டுபிடித்துள்ளதாக கர்நாடக மாநிலம் பெங்களூரு புற்றுநோய் நிபுணர் டாக்டர் விஷால் ராவ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: கரோனா வைரஸ் தொற்றுக்கு ஒரு சிறந்த சிகிச்சையைக் கண்டுபிடித்துள்ளோம். கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவற்காக ஊசி மூலம் இரண்டு ரசாயனங்கள் மற்றும் வேறு சில சைட்டோகைன்களை தயாரித்துள்ளோம். இது வைரஸுடன் வலுவாகப் போராடும். ஆனால் அது தடுப்பூசி அல்ல. இந்த தயாரிப்பு ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இதன் முதல் சிகிச்சை முறை இந்த வார இறுதிக்குள் பரிசோதனைக்குத் தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், கரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று புற்றுநோய் நிபுணர் விஷால் ராவ் கூறினார்.