சீர்காழி: இரண்டு நாட்களாக வலையில் சிக்கியிருந்த 4 அடி நீள நல்ல பாம்பை மீட்டு வனப்பகுதியில் கொண்டு விட்ட இளைஞருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
சீர்காழி ஈசானிய தெருவில் உள்ள அரவிந்த் என்பவர் வீட்டு கொல்லைப்புறத்தில் பாம்புகள் ஏதும் நுழையாமல் இருப்பதற்காக கட்டியிருந்த வலையில் 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பு சிக்கியது. இரு தினங்களாக வலையில் சிக்கியிருந்த பாம்பின் அருகில் யாராவது சென்றால் சீறியது. இதனால் அச்சமடைந்த வீட்டின் உரிமையாளர் சீர்காழி புளிச்ச காடு பகுதியைச் சேர்ந்த பாம்பு பிடிக்கும் வீரர் தினேஷ்க்கு தகவல் கொடுத்தார். தினேஷ் அவ்விடத்திற்கு வந்து வலையில் சிக்கியிருந்த நல்ல பாம்பை லாவகமாக மீட்டு பின்னர் அதன் காயத்திற்கு மருந்திட்டு வனப்பகுதியில் கொண்டு விட்டார்.
வலையில் சிக்கிய பாம்பை இளைஞர் மீட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பாராட்டைப் பெற்றது. இளைஞர் தினேஷ் சிறு வயதிலிருந்தே பாம்பு பிடிப்பதில் ஆர்வம் உடையவர். இதுவரை வீடுகளில் புகுந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் விட்டுள்ளார்