கல்லணை, அணைக்கரையில் சர் ஆர்தர் காட்டன் பிறந்த நாள் விழா 

தஞ்சாவூர் மாவட்டம்,  கல்லணையில் இந்திய நீர்ப் பாசனத் தந்தை என அழைக்கப்படும் சர் ஆர்தர் காட்டன் 217 ஆவது பிறந்த நாள் விழா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
கல்லணை, அணைக்கரையில் சர் ஆர்தர் காட்டன் பிறந்த நாள் விழா 

தஞ்சாவூர்:  தஞ்சாவூர் மாவட்டம்,  கல்லணையில் இந்திய நீர்ப் பாசனத் தந்தை என அழைக்கப்படும் சர் ஆர்தர் காட்டன் 217 ஆவது பிறந்த நாள் விழா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

பொறியாளர் சர். ஆர்தர் காட்டன், கடந்த 15.05.1803-இல் இங்கிலாந்தில் பிறந்தார். இவர் இந்தியாவில் நீர்ப் பாசன வசதிகளை செய்து தரவும், கால்வாய்கள் அமைக்கவும், அணை கட்டுவதற்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்தார். 

தஞ்சை மாவட்டத்தை உள்ளடக்கிய காவிரி பாசனப் பகுதிக்கு 1829 ஆம் ஆண்டில் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஆர்தர் காட்டன், மணல் மேடுகளால் நீரோட்டம் தடைபட்டிருந்த கல்லணையில் மணல் போக்கிகளை அமைத்தார். கரிகால் சோழன் கட்டிய கல்லணையின் அடித்தளத்தைக் கண்டு வியந்து, “ஆழம் காண முடியாத ஆற்று மணற்படுகையில் அடித்தளம் அமைக்கும் தொழில்நுட்பத்தைப் பண்டைய தமிழர்கள் வாயிலாக அறிந்து கொண்டேன்” என்றார். கல்லணைக்கு ‘கிராண்ட் அணை கட்’ என்ற பெயரைச் சூட்டியவரும் இவரே.

முக்கொம்பில் காவிரி, கொள்ளிடம் என இரண்டாகப் பிரிகிறது. கொள்ளிடம் ஆற்றுப் பகுதி தாழ்வாக இருப்பதால், அங்கு நீர் அதிகமாகப் பாய்ந்து காவிரியில் உரிய நீர் வரத்து இல்லாமல் போனது. இதனால் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்ட விவசாயிகளின் துயர் துடைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளும் பொறுப்பை ஆர்தர் காட்டனிடம் வழங்கியது ஆங்கிலேய அரசு.

கல்லணையை முன் மாதிரியாகக் கொண்டு கடந்த 1835-36 ஆம் ஆண்டுகளில் கொள்ளிடத்தின் குறுக்கே மேலணையைக் கட்டினார். இதனால் கொள்ளிடம் ஆற்றில் காவிரி நீர் பயனின்றி செல்வது தடுக்கப்பட்டது. 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள அணைக்கரையில் கீழணை உள்ளிட்ட நீர்ப் பாசனங்களையும் கட்டியெழுப்பி பாசன நீரை முறைப்படுத்தினார்.

ஆந்திராவில் கோதாவரி நதியின் தவ்லேஸ்வரத்தில் ஆர்தர் காட்டன் கட்டிய அணையால், தரிசாகக் கிடந்த 10 லட்சம் ஏக்கர் நிலப் பகுதியில் இப்போது முப்போகம் விளைகிறது. அதற்கு நன்றிக் கடனாக அங்கு கிராமந்தோறும் ஆர்தர் காட்டன் சிலையை நிறுவியுள்ளனர். 

 ஆர்தர் காட்டன் பிறந்த நாளையொட்டி,  கல்லணையில் உள்ள அவரது சிலைக்கு  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

அணைக்கரை

கட்சியின் ஒன்றியச் செயலர் ஆர். இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலர் மு.அ. பாரதி,  அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலர் ஆர்.ஆர். முகில், மாவட்ட  நிர்வாகக்குழு உறுப்பினர் டி. கண்ணனி,  திருவையாறு ஒன்றியச் செயலர் தங்க. சக்கரவர்த்தி, ஒன்றியத் துணைச் செயலர் எம். துரைராஜ், ஒன்றிய கவுன்சிலர் சு. லதா சுப்பிரமணியன்  உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 இதில், தஞ்சை மாவட்ட வேளாண் பணிகளுக்குப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் ஆற்றியுள்ள பணிகளைப் போற்றும் வகையில் இவரின் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்.

பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் பெரும்பணிகளை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் தஞ்சை மாவட்டம் கல்லனையிலும், அணைக்கரையிலும் அருங்காட்சியகம் அமைக்க  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

 இதேபோல கும்பகோணம் அருகே உள்ள அணைக்கரையில் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் படத்துக்குக் கட்சியின் ஒன்றியச் செயலர் டி.ஆர். குமரப்பா தலைமையில்  நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com