திருப்பூரில் இருந்து பிகார் மாநிலத்துக்கு 3ஆவது தடவையாக சனிக்கிழமை இயக்கப்படும் சிறப்பு ரயிலில் 1,464 தொழிலாளர்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.
திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பிகார், மேற்கு வங்கம், ஜார்கண்ட், மத்தியபிரதேசம், குஜராத், அஸ்ஸாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றிவந்தனர்.
இந்த நிலையில்,கரோனா பொதுமுடக்கம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் திருப்பூரில் சிக்கித் தவித்து வருகின்றனர். கரோனா பொதுமுடக்கத்தால் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் வேலை இழந்த வடமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஒரு சில இடங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்னையும் ஏற்பட்டு வருகிறது.
இதையடுத்து, சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு சிறப்பு ரயில்கள் மூலமாக சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்து வருகின்றனர்.
இதன்படி ஏற்கெனவே, பிகார் மாநிலத்துக்கு கடந்த மே 10,12 ஆம் தேதிகளில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் 2,558 பேர் அனுப்பிவைக்கப்படிருந்தனர். இந்த நிலையில், திருப்பூரில் இருந்து 3 ஆவது தடவையாக சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் இயக்கப்பட்டும் சிறப்பு ரயிலில் 1,464 தொழிலாளர்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.