சங்ககிரி: நாட்டில் கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தொடர்ந்து பொதுமக்களுக்கு பால் உள்ளிட்ட உணவுப்பொருள்களை உற்பத்தி செய்து நாள்தோறும் சந்தைப்படுத்தி பொதுமக்களுக்கு கிடைக்க உதவி செய்த விவசாயிகள் அனைவரையும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கௌரவிக்கும் நிகழ்ச்சி சங்ககிரியை அடுத்த வளையசெட்டிப்பாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசுகள் கடந்த மார்ச் 24ம் தேதி மாலை 6 மணி முதல் மே 17ம் தேதி வரை பொதுமுடக்கத்தை அறிவித்துள்ளனர். அதனையடுத்து பொதுமக்கள் அவரவர் வீடுகளில் உள்ளடங்கி உள்ளனர். இந்நிலையில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை விவசாயிகள் பொதுமக்களுக்கு தேவையான அன்றாட உணவுப்பொருள்களான பால், தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், புடலங்காய், கொத்தவரங்காய், முருங்கைகாய், கருவேப்பிலை உள்ளிட்ட பல்வேறு உணவு பொருள்களை உற்பத்தி செய்து பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் சந்தைபடுத்தி வருகின்றனர்.
அவர்களை கௌரவிக்கும் வகையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கௌரவிக்கும் நிகழ்ச்சிக்கு வளையசெட்டிப்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தலைவர் எஸ்.மணி தலைமை வகித்தார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் அ.ராமமூர்த்தி விவசாயிகள் அனைவருக்கும் துண்டுகளை அணிவித்து கௌரவித்து பேசியது: நாட்டில் கரோனா தொற்று பொதுமுடக்கம் நாளிலிருந்து இன்றுவரை எந்தவித பிரதிபலனும் எதிர்பாரமல் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் பால் உள்ளிட்ட பல்வேறு உணவுப்பொருள்களை உற்பத்தி செய்து பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். விவசாயிகள் உற்பத்தி செய்த பொருள்களை வியாபாரிகளிடம் குறைவான விலைக்குத்தான் அவர்களிடமிருந்து வாங்கிச்செல்கின்றனர். அதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் இக்காலகட்டத்தில் பொதுமக்களுக்கு உணவுப் பொருள்கள் தொடர்ந்து கிடைக்க வேண்டுமென்ற எண்ணத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். அவர்களை யாரும் கௌரவிக்காததால் எங்களது அமைப்பின் சார்பில் நாங்கள் கௌரவிக்கின்றோம் என்றார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சங்ககிரி வட்டசெயலர் ஆர்.ராஜேந்திரன், விவசாயிகள் கூட்டமைப்பின் நிர்வாகி நல்லதம்பி, அகில இந்திய வழக்குரைஞர் சங்க நிர்வாகி ஆர்.ராமசாமி, விவசாயிகள் குருசாமி, கோவிந்தன், முத்துசாமி, தேவராஜ் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.