திருச்சி: குடிபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 4 பேரை காவலர்கள் தேடி வருகின்றனர்.
திருவானைக்காவல் நரியன் தெரு பகுதியில் வசிப்பவர் சரவணன். இவரது மகன் விக்னேஷ் (19). இவர், சனிக்கிழமை தனது நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது, நண்பர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் விக்னேஷின் இருசக்கர வாகன சாவியை நண்பர்கள் பிடுங்கிக் கொண்டனர். இதனால், விக்னேஷ் கோபமடைந்து வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர், இரவு 11 மணிக்கு விக்னேஷுக்கு போன் செய்து ரயில்வே ஸ்டேஷன் பின்புறம் வந்தால் சாவியை தருவதாக நண்பர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து அங்கு சென்ற விக்னேஷுக்கு மீண்டும் நண்பர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்தவர்கள் விக்னேஷை ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில், பலத்தக் காயமடைந்த விக்னேஷை அப்பகுதியிலிருந்தவர்கள் மீட்டு, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், போகும் வழியிலேயே விக்னேஷ் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக, ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த விக்கி, கோகுல், மாரி, உதயகுமார் ஆகிய 4 பேரை காவல்ரகள் தேடி வருகின்றனர்.
ஸ்ரீரங்கம் பகுதியில் 15 நாட்களில் நடந்த இரண்டாவது கொலை என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.