ஆயுஷ்மான் பாரத் திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியது:  பிரதமர் மோடி பெருமிதம்

'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தால் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி
ஆயுஷ்மான் பாரத் திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியது:  பிரதமர் மோடி பெருமிதம்

புதுதில்லி: 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தால் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்தார். மேலும் இது பலரது வாழ்க்கையில்  நம்பிக்கை ஓளியூட்டிள்ளது என்று மோடி தெரிவித்துள்ளார். 

செப்டம்பர் 2018 இல், மோடி பிரதமர் ஜன் ஆரோக்கிய யோஜனா- ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை தொடங்கினார். இது உலகிலேயே மிகப்பெரிய அரசு ஆதரவு பெற்ற  சுகாதாரத் திட்டம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் பயனாளர்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் பக்க பதிவில், "ஆயுஷ்மான் பாரத் பயனாளிகளின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியது. இது ஒவ்வொரு இந்தியரையும் பெருமையடையச் செய்யும். 

இரண்டு ஆண்டுகளுக்குள், இந்த முயற்சி பலரது வாழ்க்கையில் நம்பிக்கை ஓளியை ஏற்றியுள்ளது”என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் பயனாளிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் வாழ்த்திய மோடி அவர்களின் நல் ஆரோக்கியத்திற்காக பிரார்த்தனை செய்வதாகவும், ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் தொடர்புடைய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அனைவரையும் பாராட்டினார், அவர்களின் முயற்சிகளால் இது உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமாக அமைந்துள்ளது என்றார்.

"இந்த முயற்சி பல இந்தியர்களின் நம்பிக்கையை வென்றுள்ளது, குறிப்பாக ஏழைகள் மற்றும் நலிவடைந்தவர்களுக்கு" நம்பிக்கை அளிக்கிறது என்று கூறியுள்ளார். 

"பயனாளிகள் தாங்கள் பதிவுசெய்த இடத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பிற பகுதிகளிலும் உயர்தர மற்றும் குறைந்த செலவிலான மருத்துவ சேவையைப் பெற முடியும். இதனை வீட்டை விட்டு வெளிமாநிலங்களில் வேலை செய்பவர்களும் அங்கு பதிவு செய்து பயனைப் பெற முடியும்" என்று விளக்கினார்.

மேலும்,  தனது அதிகாரப்பூர்வ பயணங்களின் போது, ​​ஆயுஷ்மான் பாரத் பயனாளிகளுடன் தான் உரையாடுவேன் என்றார்.

"துரதிர்ஷ்டவசமாக, இந்த நாட்களில் அது சாத்தியமில்லை, ஆனால் மேகாலயாவைச் சேர்ந்த பூஜா தாபாவுடன் நான் ஒரு சிறந்த தொலைபேசி தொடர்பு கொண்டு பேசும் வாய்ப்புக் கிடைத்தது. இவர்தான் ஒரு கோடியாவது பயனாளி," இவர் ராணுவ வீரர் ஒருவரின் மனைவி என்று மோடி கூறினார்.

ஆயுஷ்மான் பாரத் திட்ட வசதியைப் பயன்படுத்தி ஷில்லாங்கில் அவர் மேற்கொண்ட அறுவை சிகிச்சை குறித்து ராணுவ வீரரின் மனைவி தாபா விளக்கும் உரையாடலின் ஆடியோ கிளிப்பை பிரதமர் பகிர்ந்து கொண்டார்.

அவரது கணவர் மணிப்பூரில் பணியாற்றி வருகிறார். கரோனா ஊரடங்கால் அறுவை சிகிச்சையின் போது அந்த வீரர் தனது மனைவியுடன் இருக்க முடியவில்லை.

அவரது இரண்டு சிறிய குழந்தைகளையும் அக்கம்பக்கத்தினர் கவனித்துக் கொண்டனர்.

பிரதமர் மோடி இவரிடம் மேலும் கேட்டபோது, ​​அறுவை சிகிச்சை மற்றும் மருந்துகளுக்கு பணம் செலுத்த வேண்டியதில்லை என்று தாபா கூறினார்.

இந்த திட்ட அட்டை இல்லை என்றால், கடன் வாங்காமல் இந்த அறுவை சிகிச்சை நடைபெறுவதற்கான வாய்ப்பு கடினம் என்று அவர் கூறினார்.

இதையடுத்து ஆயுஷ்மான் பாரத் திட்டம் குறித்து மோடி பெருமிதம் அடைந்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com