தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த வந்த ஆட்டோ ஓட்டுநர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும், பொது முடக்க விதிமுறைகளுக்கு உள்பட்டு ஆட்டோவை இயக்குவதற்கு அனுமதி வழங்கக் கோரியும், ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவருக்கும் நிபந்தனையின்றி ரூ.15,000 நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், வங்கிகள் தனியார் நிதி நிறுவனக் கடன்களைத் தள்ளுபடி செய்யக் கோரியும் மாவட்ட ஆட்சியரகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது என அனைத்து ஆட்டோ சங்கக் கூட்டமைப்பினர் முடிவு செய்தனர்.
இதன்படி வியாழக்கிழமை காலை ஆட்சியரகம் முன் ஆட்டோ ஓட்டுநர்கள் சுமார் 50 பேர் திரண்டனர். அப்போது, அங்கிருந்த காவல் துறையினர் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுத்தனர். எனவே, ஆட்சியரிடம் மனு அளித்து விட்டுச் செல்வதாக ஆட்டோ ஓட்டுநர்கள் கூறினர். இதைத் தொடர்ந்து, ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
இதையடுத்து, இந்தப் போராட்டத்துக்குத் தலைமை வகித்த சிஐடியு மாவட்டச் செயலர் சி. ஜெயபால், துணைச் செயலர் கே. அன்பு உள்பட 12 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். மற்றவர்கள் கலைந்து சென்றனர்.