தஞ்சாவூர்: பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்துக்கு ரூ. 7,500 நிவாரணம் வழங்க வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டத்தில் 207 இடங்களில் பல்வேறு தொழிற் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கருப்புப் பட்டை அணிந்தும், கருப்புக் கொடி ஏந்தியும் வெள்ளிக்கிழமை காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பாதுகாப்புடன் அனுப்பி வைக்க வேண்டும். தொழிலாளர்கள் குடும்பத்துக்கு மாதம் ரூ. 7,500 நிவாரணம் வழங்க வேண்டும். தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்துவதைக் கைவிட வேண்டும். பொதுத் துறையைத் தனியாருக்குகத் தாரை வார்ப்பதையும், 8 மணி நேர வேலையை 12 மணி நேரம் என உயர்த்துவதைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் கீழ வீதியிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி மாநிலச் செயலர் சி. சந்திரகுமார், மாவட்டச் செயலர் ஆர். தில்லைவனம், தலைவர் வெ. சேவையா, துணைச் செயலர் துரை. மதிவாணன், தெரு வியாபாரிகள் சங்கத் தலைவர் ஆர்.பி. முத்துக்குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலர் சி. ஜெயபால், துணைச் செயலர்கள் எஸ். செங்குட்டுவன், கே. அன்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலர் என். குருசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன் ஐஎன்டியுசி மாவட்டச் செயலர் மோகன்ராஜ், தொமுச மாவட்டச் செயலர் கு. சேவியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல, கரந்தை, ஜெபமாலைபுரம் பணிமனைகள் உள்பட சுமார் 50 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், மாவட்டம் முழுவதும் மொத்தம் 207 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.