சென்னை கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் மூத்த தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் வி.பி.துரைசாமி.
திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த வி.பி.துரைசாமியின் பதவி பறிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக அந்தியூா் ப.செல்வராஜ் துணைப் பொதுச்செயலாளராக நியமித்து திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வெளியிட்டாா்.
இதுகுறித்து வி.பி.துரைசாமி கூறுகையில், பதவியை பறித்தது எதிர்பார்த்த ஒன்று தான். இதில் ஆச்சரியம் எதுவுமில்லை. நடவடிக்கை எடுக்கப்படும் என்பது, எனக்கு ஏற்கனவே தெரியும். திமுகவில் எனக்கு சிலர் எதிராக சதி செய்துள்ளனர் என கூறியவர், திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தன்னை நீக்குமாறு கடிதம் எழுதியிருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சென்னை கமலாலயத்தில் வெள்ளிக்கிழ காலை 10 மணி அளவில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் இல.கணேசன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்
பாஜகவில் இணைவதற்கு முன்பு வி.பி.துரைசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பாஜகவின் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டால்தான் நாட்டை காப்பாற்ற முடியும். பாஜகவின் கொள்கைகளை ஏற்றே அதில் இணைகிறேன் என்று கூறினார்.
திமுகவில் 1989-91 வரையும், 2006-11 வரையும் துணை சபாநாயகராகப் பொறுப்பு வகித்தவர் வி.பி.துரைசாமி. அதிமுகவில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது பதவிக்காலம் முடிவடைய 5 ஆண்டுகள் 2 மாதங்கள் மீதம் இருந்த நிலையில், அப்போதை திமுக தலைவர் கருணாநிதி அழைத்ததால் திமுக வந்தவர். பின்னர் திமுகவின் முக்கியப் பொறுப்பான துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.