பவானி: பாரத ஸ்டேட் வங்கியின் பவானி கிளை சார்பில் மயிலம்பாடி ஊராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரண உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
மயிலம்பாடி ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவர் ஸ்ரீஜெயந்தி சிவானந்தம் தலைமை வகித்தார். பாரத ஸ்டேட் வங்கியின் ஈரோடு மண்டல மேலாளர் வி.குருமூர்த்தி, பவானி கிளையின் முதுநிலை மேலாளர் எஸ்.இளங்குமரன் ஆகியோர் அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண உதவிகளை வழங்கிப் பேசினர்.
வங்கி சார்பில் விவசாய நகைக்கடன்கள் 7.25 சத வட்டியிலும், பிரதான் மந்திரி கிஸான் திட்டத்தில் விவசாயக் கடன் 7 சத வட்டியிலும், சிறு, குறு தொழிலாளர்களுக்கு முத்ரா திட்டத்தில் 10 சத வட்டியிலும் வழங்கப்படுகிறது. தனிநபர் கடன்கள், மொபைல் ஆப் செயலி மூலம் கடனுதவியை எவ்வித ஆவணங்களும் இல்லாமல், வீட்டிலிருந்தபடி குறைந்த வட்டியில் பெற்றுக் கொள்ளலாம். வீட்டுக் கடன் 7.40 சத வட்டியில் வழங்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
உதவிப் பொது மேலாளர் ஆர்.பத்மாவதி, வாடிக்கையாளர் சேவை மைய அலுவலர் கே.ராஜமாணிக்கம், ஊராட்சிச் செயலாளர் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.