நாமக்கல்: நாமக்கல் கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் சமூக இடைவெளியில் நின்றபடி ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது.
கரோனா தொற்று பரவலால் இந்துக் கோயில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், இஸ்லாமிய மசூதிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் சிறப்பு பூஜைகள், பிரார்த்தனைகள், தொழுகைகள் சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்கள் யாருமின்றி அந்தந்த ஆலயங்களுக்கு உட்பட்ட ஒரு சிலரால் நடத்தப்படுகின்றன. அதேபோல் திருமணங்களும் அதிக உறவினர்கள் அல்லாமல் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே ஆட்களை வரவழைத்து நடத்தப்படுகிறது.
அந்தவகையில் நாமக்கல் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கரோனா பீதியால் எவ்வித திருமண நிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை.
இந்த நிலையில் தமிழக அரசு அளித்த விலக்கு அடிப்படையில் நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை கோவையைச் சேர்ந்த மணமகன் ஏ.கிறிஸ்துராஜா, நாமக்கல்லைச் சேர்ந்த மணமகள் ஜெ.அனிதா ஆகியோருக்கு சமூக இடைவெளியில் திருமணம் அந்த ஆலயத்தின் அருட்தந்தைகள் எம்.கிளைமென்ட், மரியான் ஆஷ்டி ஆகியோரால் நடத்தி வைக்கப்பட்டது.
இந்த திருமணத்தில் உறவினர்கள் யாரும் அதிகளவில் பங்கேற்கவில்லை. மணமக்களும் சமூக இடைவெளியை கடைபிடித்து திருமணம் செய்துகொண்டனர்.
நாமக்கல்லில் சமூக இடைவெளியில் மணமக்கள் நின்றபடி கிறிஸ்து அரசர் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமணம்.