வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே சென்னையில் இருந்து வந்த டேங்கர் லாரி ஓட்டுநர் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு மேற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் 47 வயதுடையவர் டேங்கர் லாரி ஓட்டுநர். சென்னையில் சொந்தமாக டேங்கர் லாரி வைத்து பராமரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இவர், கடந்த மே.23-ஆம் தேதி சென்னையில் இருந்து இரு சக்கர மோட்டார் சைக்கிளில் தனது மனைவியுடன் வாய்மேடு திரும்பியுள்னார்.
இதனிடையே, தகவல் அறிந்த சுகாதாரத்துறையினர் அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை அறியும் பரிசோதனைக்கான மாதிரிகளை எடுத்து அனுப்பினர்.
இந்த நிலையில், பரிசோதனை முடிவில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, விரைந்த சுகாதாரத் துறையினர் தனி அவசர ஊர்தியில் அவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மேலும், அவரது மனைவி, பெற்றோர் ஆகிய மூவரும் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
அத்துடன், இரு குடும்பங்களைச் சேர்ந்த உறவினர்கள் 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் ஏற்கனவே கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 51 பேரும் குணமடைந்த நிலையில், கரோனா இல்லாத மாவட்டங்கள் பட்டியலில் நாகை மாவட்டமும் செவ்வாய்க்கிழமை இடம் பெற்றது.
இந்த நிலையில், வேதாரண்யம் பகுதியில் புதிதாக ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இருந்து வந்தவருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டதால் வாய்மேடு-பட்டுக்கோட்டை சாலை தடுப்பு ஏற்படுத்தும் பணி.