ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் 28 இறைச்சி மற்றும் மீன் கடைகள் இயங்கி வந்தது கரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரின் மையப்பகுதியில் ஆங்காங்கே இருந்து வந்த இறைச்சிக் கடைகள், மீன் கடைகள் அனைத்தும் கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அதியமான் பப்ளிக் பள்ளி அருகே ஒரே இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக செயல்பட்டு வரும் இறைச்சிக் கடைகளில் போதிய வருமானம் இல்லை எனவும் இரண்டு இடங்களில் கடைகளுக்கு வாடகை கொடுத்து வருவதாகவும், இறைச்சி விற்பனை பாதியளவிற்கு குறைந்துள்ளதால் மிகவும் சிரமப்பட்டு வருவதாக இறைச்சிக் கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
ஒரு கிலோ ஆட்டிறைச்சி ரூ.700 வரையும், நாட்டுக்கோழி ஒரு கிலோ ரூ.400 வரையும், பிராய்லர் கோழி ஒரு கிலோ ரூ.220 வரையும், மீன் ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறுகின்றனர்.
பழைய இடத்தில் இருந்த கடையில் தினசரி நான்கு முதல் ஐந்து ஆடுகள் வரை வெட்டி விற்பனை செய்து வந்துள்ளனர், தற்போது இரண்டு ஆடுகள் கூட வெட்டி விற்பனை செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது, ஆகையால் வியாபாரிகள் தாங்கள் முதலில் வைத்திருந்த இடத்திற்கு கடைகளை மாற்றி தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் கடை அமைக்கப்பட்டுள்ள இடம் தொலைவில் உள்ளதால் பொதுமக்கள் வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.