தேவதானப்பட்டி அருகேயுள்ள மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் செவ்வாய்க்கிழமை இரவு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக நல்ல மழை பெய்து வருவதால் மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. 57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் கடந்த நவ 6ம் தேதி 51 அடியாக உயர்ந்ததையடுத்து முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணியளவில் அணையின் நீர்மட்டம் 53 அடியாக உயர்ந்ததையடுத்து இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மஞ்சளாற்றின் கரையோரங்களில் வசிக்கும் கெங்குவார்பட்டி, வத்தலக்குண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என பொதுப்பணித்துறையினர் எச்சரித்துள்ளனர்.
அணையின் நீர்மட்டம் 55 அடியாக உயர்ந்த பின் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அணைக்கு வரும் நீர் அனைத்து மஞ்சளாற்றின் வழியாக வெளியேற்றப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.