லட்சுமி விலாஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பயப்பட தேவையில்லை என ரிசர்வ் வங்கி புதன்கிழமை தெரிவித்துள்ளது.
லட்சுமி விலாஸ் வங்கி கடந்த சில மாதங்களாக கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கியுள்ளது. 2020ஆம் ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டில் ரூ.397 கோடி வருவாய் இழப்பை அந்த வங்கி சந்தித்தது.
இதனையடுத்து நஷ்டத்தை தடுக்கும் விதமாக லட்சுமி விலாஸ் வங்கியின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கு வைத்திருந்தாலும் டிசம்பர் 16ஆம் தேதி வரை தனிநபர் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.25,000 மட்டுமே எடுக்க முடியும் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி தரப்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்தியில்,
லட்சுமி விலாஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பயப்பட தேவையில்லை. வாடிக்கையாளர்களின் பணத்தை திருப்பி அளிப்பதற்கு வங்கியில் பணம் உள்ளது என தெரிவித்துள்ளனர்.