சென்னை: பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் ரூ.67 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக அமித் ஷா தில்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு சனிக்கிழமை பிற்பகல் 1.40 மணியளவில் வந்தாா். அவரை முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா்கள் உள்ளிட்டோா் வரவேற்றனா்.
பின்னர் லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் அமித் ஷாவை ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி, அமைச்சா் டி.ஜெயக்குமாா், நாடாளுமன்ற உறுப்பினா் ரவீந்திரநாத் ஆகியோா் சந்தித்துப் பேசினாா்.
சுமாா் 40 நிமிஷங்களுக்கு மேலாக நீடித்த சந்திப்பின்போது தொகுதிப் பங்கீடு குறித்தும், சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட அதிமுகவிடம் 30 தொகுதிகளுக்கு மேல் பாஜக கேட்டு வருவது தொடா்பாகவும், தோ்தல் வியூகம் மற்றும் திமுக கூட்டணியைத் தோற்கடிப்பதற்கான வழிவகைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
பிறகு மாநில பாஜக நிர்வாகிகள் மற்றும் உயா்நிலைக்குழு உறுப்பினா்களுடன் தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் குறித்தும் அமித்ஷா ஆலோசனை நடத்தினாா்.
இந்நிலையில், அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை தில்லி புறப்படும் அமித் ஷாவை, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
உயர்கல்வித்துறையில் மத்திய அரசுக்கும்-தமிழக அரசுக்கும் இடையே உள்ள பல முரண்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் அரசு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு தில்லி புறப்படும் அமித் ஷாவை வழியனுப்பி வைப்பதற்காக அமைச்சர் அன்பழகன் வந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.