பூம்புகார்: திருவெண்காடு ஸ்ரீமெய்கண்டார் தொடக்கப் பள்ளியில் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு அவரது உருவ சிலை புதன்கிழமை திறக்கப்பட்டது.
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான ஸ்ரீமெய்கண்டார் துவக்கபள்ளியில் ஆரம்ப கல்வியை பயின்ற சட்டப்பேரவை உறுப்பினர் பாரதி, மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு அவரது நினைவை போற்றும் வகையில் தனது சொந்தசெலவில் பாரதியார் திருவுருவசிலையை நிர்மாணித்துள்ளார்.
அதன் திறப்பு விழா புதன்கிழமை நடந்தது. விழாவில் பாரதி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு திருவுருவ சிலையை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில்,
நமது நாட்டில் பெண்கள் இன்றைய காலகட்டத்தில் பல்வேறு உரிமைகளை பெற காரணமாக இருந்தவர் பாரதியார் என்றால் மிகையாகது. பெண்கள் விடுதலை பெற வேண்டுமென கனவு கண்டவர் பாரதியார் ஆவார். எனவே அவரது நினைவு நூற்றாண்டையொட்டி திருவுருவசிலையை திறந்து நாட்டிற்கு அர்பணிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைவதாக அவர் பேசினார்.
இவ்விழாவிற்கு பள்ளி செயலாளரும், திருக்கோயில் செயல் அலுவலருமான பா.முருகன் தலைமை வகித்தார். ஒன்றியக் குழுத்தலைவர் கமலஜோதி தேவேந்திரன், ஒன்றிய ஆணையர் கஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் கேமலதா வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் பூவராகன், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சுவாமிநாதன், ஊராட்சி மன்றத்தலைவர் சுகந்திநடராஜன், மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், முன்னாள் எம்.எல்.ஏ பூராசாமி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பாலகுரு, முன்னாள் மாவட்ட ஊராட்சித்தலைவர் சந்திரசேகரன். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்மோகன், தமிழறிஞர்கள் தாண்டவமுர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.