அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பாறைக்குளம் கிராமத்திலுள்ள அருள்மிகு வெள்ளியம்பலநாதர் திருக்கோவிலில் புதன்கிழமை மாலை புரட்டாசி மாத தேய்பிறை சிறப்புப் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
திருச்சுழி அருகே உள்ள பாறைக்குளம் கிராம த்தில் அமைந்துள்ளது அருள்மிகு வெள்ளியம்பல நாதர் திருக்கோவில். திருச்சுழி வட்டத்தில் அமைந்துள்ள அஷ்டலிங்கங்களில் ஒன்றானதும், அபூர்வமாக மேற்குத்திசை நோக்கி அமைந்த சிறப்புப் பெற்றது இக்கோவில்.
மேலும், திருச்சுழி வட்டாரத்திலேயே ஒரே பாறையில் செதுக்கப்பட்ட தனிச்சிறப்புமிக்க குடைவரைக் கோவிலும் இதுவாகும். இக்கோவிலில் புதன்கிழமை மாலை நடைபெற்ற புரட்டாசி மாத தேய்பிறை சிறப்புப் பிரதோச வழிபாட்டில் அருள்மிகு நந்தீஸ்வரப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், தீப, தூப ஆராதனைகளும் முதலில் நடைபெற்றன. பின்னர் அருள்மிகு வெள்ளியம்பலநாதருக்கு பால், விபூதி, குங்குமம், பன்னீர், இளநீர், பேரீச்சம்பழம், தேன், வாழைப்பழக் கலவை, சந்தனம், கஸ்தூரி மஞ்சள், தேன் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், தீப, தூப ஆராதனைகளும் நடைபெற்றன.
மேலும் அருள்மிகு வெள்ளியம்பலநாதருக்கு 1008 ருத்ராட்ச அபிஷேகம் செய்து, ருத்ராட்ச அலங்காரத்தில் நமச்சிவாயர் காட்சி தந்தார். அதனையடுத்து 108 தாமரை மலர்களால் அர்ச்சனை மற்றும் தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றதும் முழு அலங்காரத்தில் அருள்மிகு வெள்ளியம்பலநாதர் காட்சியளித்தார்.
இவ்வழிபாட்டின்போது பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவிலின் பூசாரியும் சிவனடியாருமான ராஜபாண்டி செய்திருந்தார்.