இந்தியாவில் மோட்டார் பைக் டாக்ஸி நடத்தி வந்த ராபிடோ நிறுவனம் வியாழக்கிழமை ஆட்டோ டாக்ஸி சேவையை தொடங்கியுள்ளது.
இந்தியாவில் முதன்முறையாக பைக் டாக்ஸி சேவையை தொடங்கி கடந்த ஒரு வருடமாக செயல்படுத்தி வந்தது ராபிடோ நிறுவனம், தற்போது இந்தியாவில் உள்ள 10 மாநிலங்களில் 14 முக்கிய நகரங்களில் ஆட்டோ சேவையை தொடங்கி உள்ளது.
இதுகுறித்து ராபிடோ நிறுவன இணை நிறுவனர் அரவிந்த் சங்கா கூறுகையில், ஆட்டோ ஓட்டுநர் மற்றும் வாடிக்கையாளர்கள் இருவருக்கும் திருப்திகரமான விலையை நிறுவனம் நிர்ணயிக்கும்.
முதற்கட்டமாக 20 ஆயிரம் ஆட்டோக்கள் எங்கள் நிறுவனத்தில் இணைந்து உள்ளனர், அடுத்த 6 மாதத்தில் 5 லட்சம் ஆட்டோக்களை இணைக்க உள்ளோம். மேலும், அனைத்து ஆட்டோக்களிலும் ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தை நிறுவியுள்ளோம்.
இந்த சேவையானது, 2020 ஆம் ஆண்டு இறுதிக்குள் 50 நகரங்களில் தொடங்கப்படும்.
ஒவ்வொரு வாடிக்கையாளர் இறங்கிய பின்னும், ஆட்டோ ஓட்டுநரால் முழுமையாக வாகனம் சுத்தம் செய்யப்படும். மேலும், ஆட்டோ ஓட்டுநர் அல்லது வாடிக்கையாளர் முகக்கவசம் அணியவில்லை என்றால் அந்த சேவையை இலவசமாக ரத்து செய்து கொள்ளும்படி கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.