போடி: போடியில் இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் அரசு மருத்துமனை ஊழியர் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.
பெரியகுளத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 38). இவர் போடி அரசு மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். திங்கள் கிழமை இரவு பணி முடித்து பெரியகுளத்திற்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். போடி தேனி நெடுஞ்சாலையில் சாலைக் காளியம்மன் கோவில் அருகே சென்றபோது எதிரில் வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த போடியை சேர்ந்த சரவணக்குமார் (43) பலத்த காயமடைந்தார். அவர் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போடி நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.