புதுச்சேரி: இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜிநாமாவால் ஆட்சிக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இருவர் இன்று தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வதாக கூறி சட்டப்பேரவை தலைவர் சிவக்கொழுந்துவிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.
இதனிடையே இவர்களின் விலகல் கட்சிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:
சட்டப்பேரவை உறுப்பினரின் ராஜிநாமா கடிதம் சட்டப்பேரவை தலைவரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அமைச்சர் ராஜிநாமா கடிதத்தை என்னிடம் கொடுக்கவில்லை. அமைச்சருக்கு முழு ஒத்துழைப்பு அமைச்சரவையில் கொடுக்கப்பட்டுள்ளது. நமச்சிவாயம் கொடுத்த ராஜிநாமா கடிதம் குறித்து சட்டப்பேரவை தலைவர் சுதந்திரமாக முடிவெடுப்பார். அமைச்சர் பதவி ராஜிநாமா பற்றியும் நான் சுதந்திரமாக முடிவு செய்வேன், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜிநாமா விவகராம் கட்சி மேலிடத்திற்கு அனுப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், கட்சி எடுக்கும் முடிவுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
மேலும் பாஜகவில் சேர முயலுபவர்கள் காணாமல் போய்விடுவார்கள் என்றும் இது எனது கடந்த கால அனுபவங்கள் உள்ளது என தெரிவித்த அவர் காங்கிரஸ் கட்சியை யாராலும் அழித்து விடமுடியாது என கூறினார். தேர்தல் நேரத்தில் இது போன்ற விவகாரங்கள் வரத்தான் செய்யும். இதை எதிர்ப்பார்த்து தான் அமைச்சர்களின் எந்த துறைகளிலும் நான் தலையிடவில்லை. இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜிநாமாவல் ஆட்சிக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என தெரிவித்த நாராயணசாமி, சுயநலத்துக்காக எம்.எல்.ஏக்கள் ராஜிநாமா செய்வது எந்தவித தாக்கத்தையும் புதுச்சேரியில் ஏற்படாது என்றும் கட்சி தலைமை உத்தரவிட்டால் வேறு ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என தெரிவித்தார். புதுச்சேரியில் திமுக கூட்டணியோடு காங்கிரஸ் கட்சி பலத்துடன் உள்ளது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.