செங்கல்பட்டில் அமைந்துள்ள மத்திய அரசின் எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தில் உடனடியாக தடுப்பூசி உற்பத்தியை தொடங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் இன்று (25.5.2021) செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி உற்பத்தி மையத்தை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, முதல்வர் மு.க ஸ்டாலின், கரோனா தொற்றைத் தடுப்பதற்கான தடுப்பூசிகளின் தேவை அதிகமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, இந்த நிறுவனத்தில் கரோனா தடுப்பூசி உற்பத்தியை உடனடியாகத் தொடங்குவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், இதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் தேவைப்படும் உதவிகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், மத்திய அரசின் நிறுவனமான எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்திற்கு உற்பத்தியை தொடங்குவதற்கான உரிய நிதியை ஒதுக்கீடு செய்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் விஜயன், தொழில் துறை முதன்மைச் செயலாளர் நா. முருகானந்தம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் .ஏ. ஜான் லூயிஸ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.