நாடு முழுவதும் ஆக்சிஜன் டேங்கர் லாரிகளை விரைவாக கொண்டு செல்லும் பணியில் விமானப் படையின் விமானங்கள் களமிறங்கியுள்ளது.
இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 3.30 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இதையடுத்து, நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறைகளை தீர்க்க ரயில்வே துறை மற்றும் விமானப்படைகள் களமிறங்கியுள்ளது.
இந்திய விமானப்படையின் விமானங்கள் நாடு முழுவதும் பல மாநிலங்களிலிருந்து ஆக்சிஜன் லாரிகளை ஏற்றிக் கொண்டு தேவைப்படும் இடங்களுக்கு கொண்டு சேர்த்து வருகின்றது.
உத்தரப் பிரதேசத்தின் ஹிந்தான் விமானப்படை தளத்தில் இருந்து மேற்குவங்கத்தின் பனகர் நகரத்திற்கு ஆக்சிஜன் நிரப்புவதற்காக காலி டேங்கர்களைக் கொண்ட லாரிகளை இந்திய விமானப் படையின் சி -17 மற்றும் ஐ.எல் -76 விமானங்கள் ஏற்றிச் சென்றன.
அதேபோல், தெலங்கானாவின் பேகம்பேட்டை விமான நிலையத்தில் இருந்து ஒடிசாவுக்கு ஆக்சிஜன் நிரப்புவதற்காக காலி டேங்கர்களைக் கொண்ட லாரிகளை இந்திய விமானப் படையின் போர்விமானங்கள் கொண்டு செல்ல உள்ளன. இதை சுகாதாரத்துறை அமைச்சர் ஈதலா ராஜேந்தர் மற்றும் சி.எஸ்.சோமேஷ் குமார் மேற்பார்வையிட்டனர்.