கர்நாடகத்திற்குள் நுழைய கேரள மக்களுக்கு அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
கரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து, கேரளத்திலிருந்து வரும் பயணிகளுக்குக் கடுமையான கட்டுப்பாட்டை விதித்துள்ளது கர்நாடக அரசு.
தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட பல சாலைகளை கர்நாடக அதிகாரிகள் திங்கள்கிழமை முதல் சீல் வைத்துள்ளனர். கரோனா எதிர்மறை சான்றிதழ்கள் உள்ளவர்களுக்கு மட்டும் எல்லையில் நுழைவதற்கு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் எழுதிய கடிதத்தில்,
கேரள மக்கள் கர்நாடகத்திற்குள் நுழைய அம்மாநில அரசு பல்வெறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், மாணவர்கள், மருத்துவ உதவிக்காக செல்பவர்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கர்நாடகத்திற்குள் செல்பவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்த தடையானது, எல்லைகளுக்கு இடையேயான போக்குவரத்து செயல்பாடுகளுக்கு மத்திய அரசு அளித்த தளர்வுகளை மீறுவதாக உள்ளது.
ஆகையால், இந்த பிரச்னையில் விரைந்து தலையிட்டு கர்நாடகத்திற்குள் கேரள மக்கள் பயணம் செய்ய விதிக்கப்பட்டிருக்கும் தடைகளை நீக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.