மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் வெள்ளிக்கிழமை சந்தித்துள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லையில் ஹரியாணா, பஞ்சாப் விவசாயிகள் தொடர்ந்து 44வது நாளாக போராடி வரும் நிலையில் ஹரியாணா முதல்வர், மத்திய அமைச்சரை சந்தித்துள்ளார்.
சந்திப்பிற்கு பின் முதல்வர் மனோகர் லால் பேசியதாவது,
இன்றைய 8வது கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என்றாலும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எட்டப்படும். வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது தவிர மற்ற பிரச்னைகளுக்கு தீர்வுகள் எட்டப்பட்டுள்ளது எனக் கூறினார்.
இதற்குமுன் கோவா மற்றும் உத்தரப் பிரதேசம் மாநில முதல்வர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்தது குறிப்பிடத்தக்கது.