அவிநாசி: தஞ்சாவூரில் இருந்து வழி தவறி பெருமால்லூர் அருகே கணக்கம்பாளையம் பகுதிக்கு வந்த சகோதர-சகோதரி இருவரும், அவிநாசியில் உள்ள காப்பகத்தில் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூரில் இருந்து பெருமாநல்லூர் அருகே கணக்கம்பாளையம் வாஷிங்டன் நகருக்கு தனது, தாயைத் தேடி அண்ணன் சந்தோஷ்(15), தங்கை தமன்னா(10) ஆகிய இருவரும் திங்கள்கிழமை வந்துள்ளனர். இவர்களைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த சம்பத், கருப்பையா, கணக்கம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் சண்முகசுந்தரம், கிராம சிறப்பு காவலர் சுரேஸ் ஆகியோர் சகோதர, சகோதரி இருவரையும் மீட்டு பெருமாநல்லூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணையில், இவர்களது பெற்றோர்களான செல்வம், மீனாட்சி ஆகியோர் குடும்பத்துடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கணக்கம்பாளையம் பகுதியில் வசித்து வந்ததும், தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதும் தெரிய வந்தது. மேலும் அவர்களது செல்லிடப்பேசி எண்ணை தொடர்பு கொள்ள முடியாததால், குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம், சகோதர சகோதரி இருவரும் அவிநாசியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் தற்சமயம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
வழி தவறி வந்த சகோதர சகோதரிகளை மீட்டு, காவல்துறையிடம் ஒப்படைத்த, சம்பத், கருப்பையா, கணக்கம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் சண்முகசுந்தரம், கிராம சிறப்பு காவலர் சுரேஸ் ஆகியோருக்கு, பெருமாநல்லூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.