தில்லியில் கடந்த 15 நாள்களில் 1,216 பறவைகள் பலியாகியுள்ளதாக தில்லி கால்நடை வளர்ப்பு பிரிவின் இயக்குநர் டாக்டர் ராகேஷ் சிங் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
பறவைகளைத் தாக்கும் பறவைக் காய்ச்சல் நோய் கேரளம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹிமாசல பிரதேசம், ஹரியாணா, குஜராத், தில்லி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் உறுதிசெய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தில்லியில் ஜனவரி 6 ஆம் தேதி முதல் 1,216 பறவைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தில்லி கால்நடை வளர்ப்பு பிரிவின் இயக்குநர் டாக்டர் ராகேஷ் சிங் கூறியதாவது,
ஜனவரி 6 முதல் தில்லியில் மொத்தம் 1,216 பறவைகள் உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளன.
இருப்பினும், அனைத்து பறவைகளும் பறவைக் காய்ச்சல் காரணமாக உயிரிழக்கவில்லை. உயிரிழந்த 201 பறவைகளின் மாதிரிகளை சோதனை செய்ததில் 24 பறவைகள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. மற்ற பறவைகளின் உயிரிழப்புகள் கடுமையான குளிர் காரணமாக ஏற்பட்டிருக்கலாம்.
மேலும் சில உயிரிழந்த பறவைகளின் சோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை எனத் தெரிவித்துள்ளார்.