பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வி.கே.சசிகலா நலமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் உள்ள வி.கே.சசிகலா (63) மூச்சுத் திணறல், காய்ச்சலுக்காக சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், மேல்சிகிச்சைக்காக பெங்களூரு, சிவாஜிநகரில் உள்ள பௌரிங் அரசு மருத்துவமனையில் ஜன. 20-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஹைபோ தைராடிசம், ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோயால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்த சசிகலாவின் உடல்நிலையில் சிகிச்சைக்குப் பிறகு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பௌரிங் அரசு மருத்துவமனையின் இயக்குநா் மனோஜ்குமாா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இதனிடையே, பௌரிங் அரசு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் கருவி செயல்படாததால், அங்கிருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் கே.ஆா்.சந்தை பகுதியில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு சசிகலா மாற்றப்பட்டாா். அங்கு பிற்பகல் 2.30 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு சி.டி.ஸ்கேன், ரத்தம், இருதய பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
அங்கும் சசிகலாவுக்கு ஆா்.டி.-பி.சி.ஆா்., ட்ரூநாட் போன்ற கரோனா சோதனைகள் மீண்டும் நடத்தப்பட்டன. அதில் சசிகலாவுக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது தெரியவந்ததாக விக்டோரியா அரசு மருத்துவமனை வியாழக்கிழமை இரவு தெரிவித்தது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சசிகலா தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.