ஒடிசா மாநிலத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஒருவர் புதன்கிழமை காலை உயிரிழந்ததாக மாநில சுகாதாரத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாடு முழுவதும் ஜனவரி 16ஆம் தேதி தொடங்கின. இதுவரை நாடு முழுவதும் நேற்று மாலை 7 மணிவரை 20.39 லட்சம் முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாட்டில் அதிக பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்ட இரண்டாவது மாநிலமாக ஒடிசா உள்ளது. மேலும், இதுவரை மாநிலத்தில் 1,77,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குநர் பிஜய் பனிகிராஹி புதன்கிழமை கூறியதாவது,
மத்திய அரசு ஒடிசாவிற்கு வழங்கப்பட்ட 3 லட்சம் கரோனா தடுப்பூசிகளில் 1,77,000 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 1,73,000 தடுப்பூசிகளை பிப்.10 ஆம் தேதிக்குள் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் 2 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம், சம்பால்பூரில் உள்ள வீர் சுரேந்திர சாய் மருத்துவ நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்ட நுவாபாடா மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். அவர் ஜனவரி 23 அன்று கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர் ஆவார்.
இருப்பினும், மருத்துவ முதற்கட்ட தகவலின்படி, உயிரிழப்பிற்கான காரணம் கரோனா தடுப்பூசியுடன் தொடர்புடைய பிரச்னை இல்லை என்று தெரிவித்துள்ளார்.