விவசாயிகள் வன்முறையில் ஈடுபட்டதாக கூறுவதை நான் நம்பவில்லை என்று பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
தில்லியில் விவசாயிகள் குடியரசு தினத்தன்று(செவ்வாய்க்கிழமை) நடத்திய டிராக்டர் பேரணியில் ஆங்காங்கே வன்முறை வெடித்ததால் தலைநகர் தில்லி போர்க்களமாக மாறியது. காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறி சென்றதால் காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் விவசாயிகளின் பேரணியை கலைக்க முற்பட்டனர்.
இதனிடையே தில்லி செங்கோட்டை பகுதியில் புகுந்த விவசாயிகள் விவசாய சங்க கொடியை ஏற்றினர்.
இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் கூறுகையில்,
செங்கோட்டையில் வன்முறை நடந்தது எந்த இந்தியரும் பெருமை கொள்ள முடியாத ஒன்று. செங்கோட்டை நமது சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் சின்னம்.
விவசாயிகள் வன்முறையில் ஈடுபட்டதாக கூறுவதை நான் நம்பவில்லை. இந்த வன்முறை குறித்து விசாரணை செய்து யார் காரணம் என்று கண்டுபிடிக்க வேண்டும்.
மத்திய அரசு மற்றும் விவசாயிகள், பேச்சுவார்த்தையை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என தெரிவித்தார்.