கரோனா தடுப்பூசி காரணமாக இதுவரை எந்த மரணமும் ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
நாடு முழுவதும் இரண்டாம் கட்ட தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. இதையடுத்து பிரதமர் மோடி மற்றும் பல அரசியல் தலைவர்கள் இன்று காலை தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
இதுகுறித்து ஹர்ஷ்வர்தன் கூறியதாவது,
இந்தியாவில் போடப்படும் இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பனவை என நான் தொடக்கம் முதலே சொல்லிக் கொண்டிருக்கிறேன். எப்போதும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக வழிநடத்த வேண்டுமென பிரதமர் எங்களிடம் கூறுவார். 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியவுடன் முதல் நபராக தடுப்பூசி போட்டுக் கொண்டார். நாங்கள் பிரமருக்கு நன்றி கூறுகிறோம்.
அவர் கோவேக்ஸின் தடுப்பூசியை போட்டுக் கொண்டார். விஞ்ஞான ரீதியாக கோவேக்ஸின் தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்ட பின்பும், அதற்கு எதிராக தவறான தகவல்கள் பரவின, அதற்கான பதிலை பிரதமர் அளித்துள்ளார் என நினைக்கிறேன்.
தடுப்பூசி போட்டுக் கொண்டபின் பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டோரின் சதவீதம் 0.0004 ஆகும். இது மிகக் குறைவான பாதிப்பாகும். தடுப்பூசி காரணமாக எந்த மரணமும் இதுவரை ஏற்படவில்லை.
60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களும் தடுப்பூசியை போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். அது மக்களுக்கு முன்னுதாரணமாக அமையும்.
நான் நாளை(செவ்வாய்க்கிழமை) கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள திட்டமிட்டுள்ளேன் எனக் கூறினார்.
மேலும், கரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களுடன் எங்கள் அமைச்சரவை மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர் எனத் தெரிவித்தார்.