தம்மம்பட்டியில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
கெங்கவல்லி தேர்தல் நடத்தும் அலுவலர் அமுதன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் அறிவுறுத்தல்படி, தம்மம்பட்டியில் திங்கள்கிழமை மாலை சட்டமன்ற தேர்தல் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தம்மம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார், காவல் உதவி ஆய்வாளர் இராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் கெங்கவல்லி வருவாய் ஆய்வாளர் கனிமொழி துவக்கி வைத்தார். பேரணி, தம்மம்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்திலிருந்து அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி வரை சென்று திரும்பியது.
பேரணியின்போது, பொதுமக்களிடம், வருகிற சட்டமன்ற தேர்தலில் அனைவரும் தவறாது வாக்களிக்கவேண்டும் என்றும், 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
பேரணியில் தம்மம்பட்டி பகுதியிலுள்ள கிராம நிர்வாக அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வருவாய்த்துறையினர் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.