உத்தரகண்ட் மாநிலத்தில் 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 15 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கரோனா பெருந்தொற்று காரணமாக விதிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கத்தில் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பின்னர் கரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து மத்திய அரசு அளித்த தளர்வுகளின்படி மாநில அரசுகள் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறந்து வருகின்றன.
அந்தவகையில் உத்தரகண்ட் மாநிலத்தில் ஏப்ரல் 15ஆம் தேதி 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறப்பின் போது மாணவர்கள் கட்டாயம் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், முகக்கவசம் அணிந்து பள்ளிக்கு வரவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழகம், புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா இரண்டாம் அலை காரணமாக மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.