கரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து மேற்கு வங்க மாநிலத்தில் புதிய கட்டுப்பாடுகளை மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் கரோனா இரண்டாம் அலையால் நாள்தோறும் 17 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மம்தா பேசியது,
கரோனா பரவலை கருத்தில் கொண்டு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. மக்கள் முகக்கவசங்களை கட்டாயமாக அணிய வேண்டும். மாநில அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும்.
வணிக வளாகங்கள், தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள், சலூன்கள் திறக்க தடை விதிக்கப்படுகிறது. அரசியல் கூட்டங்கள், பொது மக்கள் கூடவும் தடை விதிக்கப்படுகிறது.
அனைத்து சந்தைகள், சில்லறை விற்பனையாளர்கள், கடைகளும் காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்.
புறநகர் ரயில்களின் இயக்கம் நாளை முதல் நிறுத்தப்படும். மெட்ரோ உள்ளிட்ட மாநில போக்குவரத்து பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது என்றார்.