மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் பெரியகோட்டையில் அரசு அங்கன்வாடி மைய கட்டிடத்தை அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் இடித்ததாக காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
பெரியகோட்டை கிராமத்தின் மையப்பகுதியில் அங்கன்வாடி மையம் சொந்த கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. 15 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இம்மையத்தில் படித்து வந்தனர்.
கொரானோ பரவல் காரணமாக மையம் செயல்படவில்லை. பொருட்கள் அனைத்தும் குழந்தைகளின் வீடுகளுக்கே சென்று கொடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், பெரியகோட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் அதிமுகவைச் சேர்ந்த ராஜாத்தி மற்றும் அவரது கணவர் சேகர் இயந்திரங்களுடன் அங்கன்வாடி மைய கட்டிடத்தை இடித்து தகர்த்து விட்டனர்.
மேலும் மைய கட்டிடத்தில் இருந்த கம்பிகள், கதவுகள், ஜன்னல்கள் உள்ளிட்டவற்றையும் எடுத்து சென்றுள்ளனர். இதுகுறித்து பெரியகோட்டை கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மானாமதுரை சிப்காட் காவல்நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், அங்கன்வாடி மைய கட்டிடம் 20 ஆண்டுகளாக எந்த சேதாரமும் இன்றி உள்ளது. கட்டிடத்தின் அருகில் மைய குழந்தைகளுக்கு என கழிப்பறையும் கட்டப்பட்டுள்ளது.
ஊராட்சி மன்ற தலைவரும் அவரது கணவரும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமலேயே கட்டிடத்தை இடித்துவிட்டனர்.
மேலும் அதில் இருந்த பொருள்களையும் எடுத்துச் சென்றுவிட்டனர். இதுகுறித்து ஒன்றிய ஆணையாளர் மற்றும் போலீசில் புகார் செய்துள்ளேன் என்றார்.