சென்னையில் கரோனாவால் பலியானவர்களை தகனம் செய்வதில் குறைபாடுகள் இருந்தால் புகார் அளிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனாவால் உயிரிழப்பவரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால், சுடுகாடுகளில் தகனம் செய்வதற்கு காத்திருக்கும் நிலை சில பகுதிகளில் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள சுடுகாடுகளில் தகனம் செய்ய பணம் கேட்டாலோ, இலவச அமரர் ஊர்திகளுக்கு பணம் கேட்டாலோ புகார் அளிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
புகார் அளிக்க 044-25384520 மற்றும் 9498346900 என்ற வாட்ஸ்ஆப் எண்ணையும் மாநகராட்சி அறிவித்துள்ளது.
மேலும், இலவச அமரர் ஊர்தி சேவையை பெற 155377 என்ற எண்ணிற்கு மக்கள் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலங்களை தகனம் செய்வதில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.