ஜெய்ப்பூா்: ராஜஸ்தான் மாநிலமுன்னாள் முதல்வர் ஜெகநாத் பகாடியா கரோனா தொற்று பாதிப்பால் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வருமான ஜெகநாத் பகாடியா (89) 1980-81 -இல் ராஜஸ்தான் மாநில முதல்வராக இருந்தவர், ஹரியானா மற்றும் பிகார் மாநில ஆளுநராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
முதுமை காரணமாக ஓய்வில் இருந்த ஜெகநாத் பகாடியாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்தபோதும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு மாநில முதல்வா் அசோக் கெலாட், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
ஜெகநாத் மறைவால் மிகவும் அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ள ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஆளுநராகவும், மத்திய அமைச்சராகவும் பணியாற்றிய அவர், நாட்டின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தார்.
ஜெகநாத் பகாடியாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ராஜஸ்தானில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். அனைத்து அரசு அலுவலகங்களும் வியாழக்கிழமை மூடப்படும். ஜெகநாத் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் செய்யப்படும் என்று முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் ஜெகநாத் பகாடியா மறைவு தனக்கு வேதனை அளிப்பதாகவும், தனது நீண்ட அரசியல் மற்றும் நிர்வாக வாழ்க்கையில், சமூக அதிகாரமளித்தலுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியதாக மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் தனது இரங்கல் தெரிவிப்பதாகவும் மோடி கூறியுள்ளார்.
ராஜஸ்தானில் ஏற்கெனவே ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த இரு எம்எல்ஏக்களும், பாஜகவைச் சோ்ந்த எம்எல்ஏ இருவரும் கரோனாவால் இறந்துவிட்டனா்.