கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியின் தலைமை ஆசிரியர் திருபுரசுந்தரி ரூபாய் ஒன்றரை லட்சம் சொந்த செலவில் பள்ளி மாணவர்கள், பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், துப்புரவு பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் என 260 பேருக்கு கரோனா நிவாரண உதவியை வழங்கினார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை பஜாரில் உள்ளது ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் திரிபுரசுந்தரி. இவர் இந்த பள்ளிக்கு தலைமை ஆசிரியராக வந்ததில் இருந்து கடந்த 15 ஆண்டுகளில் இந்த பள்ளியை தனியார் பள்ளிக்கு நிகராக கொண்டு வந்தார். இந்த பள்ளியானது சிறந்த பள்ளியாக மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கரோனா இரண்டாவது அலையில் பொதுமக்கள் பெரிதும் அவதியுற்றுள்ளதை கண்ட தலைமை ஆசிரியர் திரிபுரசுந்தரி தான் பணிபுரியும் பள்ளியில் மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற நோக்கில் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பில் 220 மாணவர்கள் உள்ளிட்ட 260 நபர்களுக்கு அவரது சொந்த பணமான ஒன்றரை லட்சம் செலவில் 5 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு, 1 கிலோ சக்கரை, 1 கிலோ உப்பு உள்ளிட்ட நிவாரண உதவிகளை ஏற்பாடு செய்திருந்தார்.
தொடர்ந்து மாணவர்களின் சார்பில் அவர்களது பெற்றோர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்வு பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் திரிபுரசுந்தரி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்விற்கு திமுக ஒன்றிய துணை செயலாளர் கே.இ.திருமலை, கீழ்முதலம்பேடு ஊராட்சி தலைவர் கே.ஜி.நமச்சிவாயம் முன்னிலை வகித்தனர். வட்டார கல்வி அலுவலர் பூவராகவமூர்த்தி, முனிராஜசேகர் வாழ்த்துரை வழங்கினர்.
தொடர்ந்து இந்த விழாவில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்று தலைமை ஆசிரியர் திரிபுரசுந்தரியின் சிறப்பான சேவையை பாராட்டியதோடு பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் என 260 பேருக்கு தலைமை ஆசிரியர் திரிபுரசுந்தரியின் சார்பில் நிவாரண உதவிகளை வழங்கி அனைவரும் அரசின் கரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்றும், தகுதியான நபர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
இது குறித்து பேசிய தலைமை ஆசிரியர் திரிபுரசுந்தரி கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளி செயல்படாத நிலையில் மாணவர்களுக்கு எனது சம்பள தொகை இந்த பொதுமுடக்க காலத்தில் பயன்பட வேண்டும் என்கிற நோக்கில் இரு மாத சம்பளத்தோடு சிறிது பணம் போட்டு ஒன்றரை லட்சத்தில் மாணவர்களுக்கு உதவ முடிந்தது மனதுக்கு நிறைவை தருகிறது என்றார்.
நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் தேவேந்திரன், சந்திரமௌலி, ரவிசந்திரன், புருஷோத்தமன், பாலகிருஷ்ணன், திருவேங்கடம், சீலம் வரதராஜன், மோகனசுந்தரம், எத்திராஜூலு, பிரபாகரன், பள்ளி ஆசிரியர்கள் குணசீலா, தீபா, கோட்டீஸ்வரி, ஜெகருநிஷா, ரேவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.