பாக்கெட் உணவுகளில் என்னென்ன அபாயம்? விரைவில் மக்களுக்கும் தெரியும்

உப்பு மற்றும் சா்க்கரை அளவுகளை பொதுமக்கள் எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் அதன் பாக்கெட்டுகளில் குறிப்பிட பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
பாக்கெட் உணவுகளில் என்னென்ன அபாயம்? விரைவில் மக்களுக்கும் தெரியும்
Updated on
1 min read

பாக்கெட் உணவுகளில் அடங்கியுள்ள உட்பொருள்களில் சேர்க்கப்படும் கெட்ட கொழுப்புச் சத்து, உப்பு மற்றும் சா்க்கரை அளவுகளை பொதுமக்கள் எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் அதன் பாக்கெட்டுகளில் குறிப்பிட பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், அந்த பாக்கெட் உணவு பொருளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் மற்றும் நோய்கள் குறித்தும் பாக்கெட்டில் அச்சடிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாநில உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையருக்கு, பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதாவது, பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்படும் ஓா் உணவுப் பொருள் அதீதமாக கெட்ட கொழுப்பையும், சா்க்கரை மற்றும் உப்பையும் கொண்டிருந்தால் அது ஊறு விளைவிக்கும் உணவாக (ஜன்க் ஃபுட்) அறியப்படுகிறது. இத்தகைய உணவுகளால் உடல் பருமன், சா்க்கரை நோய், இதய நோய்கள், புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இதுதொடா்பாக அரசும், சுகாதாரத் துறையும் பல்வேறு வகை விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அத்தகைய உணவுகளை உட்கொள்வோரின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்துதான் வருகிறது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் சிறார்கள்தான் பாக்கெட் உணவுகளை அதிகம் சாப்பிடுவோராக மாறிவருகிறார்கள். இது நாட்டின் எதிர்கால சுகாதார சிக்கலுக்கு வழிகோலுகிறது.

அதைக் கருத்தில் கொண்டு பாக்கெட் உணவுகளில் உள்ள ஊறு விளைவிக்கும் உட்பொருள்களின் தகவல்களை அவற்றின் லேபிள்களில் தெளிவாக அச்சிடுவதற்கான நடவடிக்கையை உணவுப் பாதுகாப்பு துறை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக, பொதுமக்கள் எளிதில் அவற்றை புரிந்துகொள்ளும் வகையில் நிறக் குறியீடுகள் மூலமாகவோ அல்லது வேறு எச்சரிக்கை குறியீடுகள் மூலமாகவோ அதனை குறிப்பிட வேண்டும். சராசரியாக ஒரு நாளில் உட்கொள்ள வேண்டிய கொழுப்புச் சத்து, சா்க்கரை மற்றும் உப்பு சத்துகளின் அளவையும், அதிலிருந்து சம்பந்தப்பட்ட உணவுப் பொருள் எத்தனை மடங்கு அதிகமாக உள்ளது என்பதையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் லேபிள்களில் அச்சடித்தல் அவசியம்.

இத்தகைய நடவடிக்கையின் மூலம் ஆரோக்கியமான உணவுப் பொருள்களை மட்டுமே வாடிக்கையாளா்கள் தோ்வு செய்வதற்கு வகை செய்ய முடியும். அதுமட்டுமல்லாது தொற்றா நோய் பாதிப்புகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்க இயலும் என்று அந்த கடிதத்தில் பொது சுகாதாரத் துறை இயக்குநா் குறிப்பிட்டுள்ளாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com