ராம்நாத் கோயாங்கா, நிஜமான பத்திரிகையாளர்களுக்கு, பத்திரிகைத் துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு உள்நுழைந்தவர்களுக்கு, இதழியலை நேசிப்பவர்களுக்கு இவரது பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் உள்ளுக்குள் ஒரு சின்ன சந்தோஷம் பரவச் செய்தவர் என்றால் அது மிகையில்லை. பிரிட்டிஷ் காலனி ஆதிக்க காலத்திலும் சரி, சுதந்திரத்துக்குப் பின்னான இந்திரா காந்தி காலத்து எமர்ஜென்ஸி நெருக்கடியிலும் சரி, தான் கொண்ட கொள்கையில் திடமாயிருந்து தனது பத்திரிகை லாப நோக்கத்துக்காக மட்டுமே நடத்தப்படவில்லை என்பதை மக்களுக்கும், இந்திய அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் உணர்த்தியவர்.
எமர்ஜென்ஸி காலத்தில் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்த பல இந்தியச் சிற்றூர்களுக்கும், கிராமங்களுக்கும், கடைக்கோடி குக்கிராமங்களுக்கும் நாட்டு நடப்புகளை உள்ளது உள்ள படி எடுத்துச் சென்றதில் தினமணிக்கும், இந்தியன் எக்ஸ்பிரஸுக்கும் இணையற்ற பங்கிருந்தது. இதை மறைந்த முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் தனது சுயசரிதையான ’அக்னிச் சிறகுகளில்’ அவரது ராமேஸ்வரத்து பள்ளி நாட்களை நினைவு கூறும் பகுதியில் பதிவு செய்திருக்கிறார். மாகாபாரதத்தில் குரு வம்சத்தை கட்டமைத்த பீஷ்ம பிதாமகரைப் போல கோயாங்காவை ’சுதந்திரத்துக்குப் பின்னான இந்தியாவை கட்டமைத்த பத்திரிகையுலகப் பிதாமகர்’ என்று சொல்லலாம்.
'ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருதுகள் 2015'
அத்தகைய பெருமைக்குரிய ராம்நாத் கோயாங்கா நினைவுகளைப் போற்றும் வகையில் 2004 ஆம் வருடத்தில் இருந்து ஒவ்வொரு வருடமும் ஊடகத் துறை சாதனையாளர்களுக்கு ’ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருதுகள்’ வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வருடமும் தங்களது நேர்மையான, சிறப்பான பங்களிப்பால் பல பத்திரிகையாளர்கள் இந்த விருத்துக்காக தேர்வாகி நேற்று மும்பையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற விழாவில் விருதளிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.
மோடியின் பாராட்டு:
விழாவில் தலைமையேற்றுப் பேசிய பிரதமர் மோடி ”ராம்நாத்ஜி எப்போதும் தான் கொண்ட கொள்கையில் மிக உறுதியாக இருந்தவர் என்றும், சுதந்திரப் போராட்ட காலத்திலும், பிந்தைய நெருக்கடி காலங்களிலும் சரி அவர் தனது கொள்கையை சிறிதும் தளர்த்திக் கொள்ளாதவர் என்பதோடு, அரசின் அனுகூலங்களுக்காக தனது கொள்கையில் சமரசம் செய்து கொள்வது சிறந்த பத்திர்கையாளருக்கு பெருமை தரக்கூடியதில்லை என்பதை தனது செயல்கள் மூலம் நிரூபித்து வாழ்ந்து காட்டியவர்” அத்தகைய பெருமைக்குரியவரது பெயரில் வழங்கப் படும் இந்த விருதுகளைப் பெறும் ஒவ்வொரு பத்திரிகையாளருக்கும் எனது வாழ்த்துகள் என்று பாராட்டிப் பேசினார்.
விருது பெற்ற பத்திரிகையாளர்கள் விபரம்:
பிரகாஷ் ராகேஷ் கர்தலே நினைவு சிவிக் இதழியல் விருது:
கிறிஸ்டியன் மேத்யூ ஃபிலிப் (தி டைம்ஸ் ஆஃப் இண்டியா)
கண்ணுக்குத் தெரியாத இந்தியாவை வெளிப்படுத்துதலுக்கான விருது:
பிரிண்ட் மீடியா - அஷ்வக் மஸூதி (மிண்ட்)
பிராட்காஸ்ட் மீடியா - சாரதா லஹங்கீர் (கலிங்கா டி.வி)
ஹிந்தி:
பிரிண்ட் | சந்தோஷ் குமார் (இந்தியா டுடே)
பிராட்காஸ்ட்| சஞ்சய் நந்தன் (ABP நியூஸ்) ஸ்யேதா அஃபிஃபா ஹடூன் (நியூஸ் 24)
பிராந்திய மொழிகள்:
பிரிண்ட் | ஃபிரோஷ் கான் M (மத்யமம் தினசரி), நிலீனா அதோலி (மாத்ரு பூமி)
பிராட்காஸ்ட் | பிரமோத் சாஸ்திரி (டி.வி 9)
ஸ்போர்ட்ஸ் ஜர்னலிஸம்:
பிரிண்ட் | தேவேந்திர பாண்டே (தி இண்டியன் எக்ஸ்பிரஸ்)
பிராட்காஸ்ட் |சஞ்சீப் முகர்ஜி (CNN- IBN)
ஜம்மு& காஷ்மீர் மற்றும் வட கிழக்கு இந்தியாவில் திறம்பட செய்தி சேகரித்து அளித்தல்:
பிரிண்ட் | இஷா ராய் (தி இண்டியன் எக்ஸ்பிரஸ்), மட்டிபட்ல ராஜ்சேகர் (ஸ்க்ரோல்.இன்)
பிராட்காஸ்ட் |சுபஜித் சென்குப்தா (CNN-IBN)
சூழலியல் செய்தி சேகரிப்பு:
பிரிண்ட் | ப்ரீதா சாட்டர்ஜீ, அனிருதா கோஷல் (தி இண்டியன் எக்ஸ்பிரஸ்)
பிராட்காஸ்ட் | சுஷில் சந்திர பகுகுனா (என்.டி.டி.வி இந்தியா)
வர்த்தகம் மற்றும் பொருளாதார செய்திகள்:
பிரிண்ட் |குஷ்பூ நாராயண் (தி இண்டியன் எக்ஸ்பிரஸ்) & ராஜீவ் துபே (பிஸினஸ் டுடே)
பிராட்காஸ்ட் | அர்ச்சனா சுக்லா (CNBC TV18)
இந்தியாவுக்கான அயல்நாட்டு செய்தி சேகரிப்பாளர்:
பிரிண்ட் | விக்டர் ஜான் மல்லட் (ஃபினான்ஸியல் டைம்ஸ்)
புலானாய்வு செய்தி சேகரிப்பு:
பிரிண்ட் |மனீஷா பாண்டே, சந்தீப் பாய் (நியூஸ் லாண்டரி)
பிராட்காஸ்ட் கணேஷ் சுரத்சந்த் தாகுர் (ABP News)
ஆன் தி ஸ்பாட் செய்தி சேகரிப்பு:
பிரிண்ட் | நயன்தாரா நாராயண் (ஸ்க்ரோல். இன்)
பிராட்காஸ்ட் |அமீர் ரஃபீக், ராகேஷ் சோலங்கி (NDTV)
பத்தி மற்றும் கட்டுரை எழுத்தாளர்களுக்கான விருது:
ஷமிக் பாக் (மிண்ட்), டி.வி. ஸ்ரீதேவி (மலையாள மனோரமா)
அரசு மற்றும் அரசியல் செய்தி சேகரிப்பு:
பிரிண்ட் | அஷுதோஷ் பரத்வாஜ் (தி இண்டியன் எக்ஸ்பிரஸ்)
பிராட்காஸ்ட் | ஹலிமாபி அப்துல் குரேஷி (IBN Lokmat)
ஃபோட்டோ ஜர்னலிஸம்:
புர்ஹான் கினு (ஹிந்துஸ்தான் டைம்ஸ்)
வர்ணனை மற்றும் விமர்சனக் கட்டுரைகள்:
அன்னா எம் எம் வெட்டிகாட் (BLink), பிரமித் பட்டாச்சார்யா (மிண்ட்)
புத்தகங்கள்:
நான் ஃபிக்ஸன் | ஆசிரியர்: அக்ஷய முகுல்
புத்தகம்: கீதா பிரஸ் & தி மேக்கிங் ஆஃப் ஹிந்து இண்டியா
வெளியீடு: ஹார்பர் காலின்ஸ்
திறம்பட செய்தி சேகரித்தமைக்காக வழங்கப்படும் சஞ்சீவ் சின்ஹா நினைவு விருது:
அதிதி வத்சா (தி இண்டியன் எக்ஸ்பிரஸ்)
திறம் பட செய்தி தொகுத்தமைக்காக வழங்கப்படும் பிரியா சந்திர சேகர் நினைவு விருது:
சாய்கட் குமார் போஸ் (தி இண்டியன் எக்ஸ்பிரஸ்)
’கோயாங்கா இதழியல் விருது’ பெற தமிழ் ஊடகவியளாலர்களுக்கு விருப்பமில்லையா?
நேற்று 2.10.16 அன்று மும்பையில் இந்த விழா நடைபெற்றது. விருதுப் பட்டியலில் மருந்துக்கும் தமிழ் ஊடகவியலாளர்களின் பெயர்கள் விருதின் எந்தப் பிரிவின் கீழும் காணக் கிடைக்கவில்லை. ’மாத்ருபூமி, மத்யமம்’ என்ற வகையில் மலையாள ஊடகத்தினர் இருவர் பிராந்திய மொழிகளுக்கான விருதுக்கு தேர்வாகி இருந்தனர். இதில் புரியாத நெருடல் தமிழ் ஊடகத்தினர் இந்த விருதைப் புறக்கணித்து விட்டனரா? அல்லது போட்டியில் கலந்து கொண்டு விருதுக்குத் தேர்வாகவில்லையா? விடை தெரியாத இந்த கேள்விக்கு தமிழ் ஊடகவியலாலர்கள் தான் பதிலளிக்க வேண்டும்.
விருதைப் புறக்கணித்த டைம்ஸ் ஆஃப் இண்டியா பத்திரிகையாளர்:
இதில் புத்தகங்களுக்கான விருதுக்குத் தேர்வான ’அக்ஷ்ய முகுல்’ எனும் டைம்ஸ் ஆஃப் இண்டியா பத்திரிகையாளர், தான் மோடி கையால் அந்த விருதை வாங்க விரும்பவில்லை என்று கூறி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளார். தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைப் பேட்டியில் “ராம்நாத் கோயங்கா பெயரில் வழங்கப் பட்ட இந்த விருது தனக்குப் பெருமையளிப்பதாகவும், ஆனால் மோடி கையால் விருதைப் பெற்றுக் கொள்ள தனக்கு விருப்பமில்லை என்றும்” அவர் தெரிவித்துள்ளார். இவரது சார்பில் நேற்று மோடி கையால் விருதினைப் பெற்றுக் கொண்டவர் கிருஷன் சோப்ரா, இவர் விருது பெற்ற புத்தகத்தை வெளியிட்ட ஹார்பர் காலின்ஸ் பதிப்பகத்தின் தலைமை பதிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.