கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் சிறார் ஆபாசப் படங்களைத் தடுப்பதற்காக, புதிய கட்டமைப்பு உருவாக்கப்படும் என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி கூறினார்.
இதுதொடர்பாக, தில்லியில் அவர் செவ்வாய்க்கிழமை மேலும் கூறியதாவது:
மொத்தமுள்ள இணையதளங்களில், 37 சதவீதம் ஆபாச இணையதளங்களாகும். அவற்றில் பெரும்பாலானவை, சிறார்களைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டவையாகும்.
இந்நிலையில், சிறார் ஆபாசப் படங்களைத் தடுப்பது உள்பட சிறார் வன்கொடுமைகளைத் தடுப்பதற்காக, தேசிய அளவிலான புதிய கட்டமைப்பு ஒன்றை மத்திய அரசு உருவாக்கவுள்ளது. இதற்கான வரையறைகளை உருவாக்குவதற்காக, மத்திய அரசின் உள்துறை, சட்டம், மனித வளம், தகவல் தொடர்பு ஆகிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், முக்கிய இணையதள நிர்வாகிகள் ஆகியோருடன், வரும் 16-ஆம் தேதி கலந்தாலோசிக்க இருக்கிறோம். தனியார் சிறார் பள்ளிகளில், குழந்தைகளின் உரிமைகள் மீறப்படுவதாகப் புகார்கள் குவிந்து வருகின்றன. எனவே, அவற்றை முறைப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தனியார் சிறார் பள்ளிகளில், குழந்தைகளின் பாதுகாப்பு, ஆசிரியர்-மாணாக்கர் விகிதம், பாடத்திட்டம், உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் ஏற்கெனவே வகுத்துள்ளது. மேலும், குழந்தைகளைத் தத்தெடுப்பதில் உள்ள சட்ட சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்காக, தேசிய அளவிலான தீர்ப்பாயம் அமைப்பது குறித்து மத்திய சட்ட அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றார் அவர்.