அரசின் மதிய உணவுத் திட்டத்தினால் நாடு முழுதும் சுமார் 12 கோடி மாணவர்கள் பலனடைந்து வரும் சூழலில், தற்போது மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் இனிமேல் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் சமையல் பணிக்காக நியமனம் ஆகியிருக்கும் சமையல்காரர்கள் மற்றும் அத்திட்டத்தின் மூலம் பலனடையும் மாணவர்கள் என அனைவருக்குமே ஆதார் கார்டு சான்றுகள் கட்டாயமாக்கப் பட வேண்டும் என பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது.
இந்தப் பரிந்துரையை ஆட்சேபித்து இன்று நாடாளுமன்றத்தின் பூஜ்ய நேரத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது காங்கிரஸ் உறுப்பினர் கே.எஸ். வேணுகோபல் குரல் எழுப்பினார். அதாவது அரசின் மதிய உனவுத் திட்ட முறையில் உணவின் தரம், மற்றும் உணவு பரிமாறப் படும் விதம் போன்றவற்றின் மீது மாணவர்களுக்கும் அவர்களுடைய பெற்றோருக்கும் பட்டியலிடத் தக்க வகையில் நீடித்த குறைகள் இருக்கின்றன. இம்மாதிரியான சூழலில் பலனடையும் 12 கோடி மாணவர்களும் ஆதார் கார்டுகளை சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்டால் அது சாத்தியப் படாது.
மதிய உணவுத் திட்டம் என்பது அரசு தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையையும், வருகையையும் அதிகரிக்கும் பொருட்டு அரசு ஆதரவில் உருவாக்கப் பட்ட பள்ளி மாணவர்களின் நலன் காக்கும் திட்டங்களில் ஒன்று. அதன் அடிப்படை நோக்கமே கிராமப்புற ஏழை மாணவர்களை அரசுப் பள்ளிகளை நோக்கி இழுப்பதே! அப்படி இருக்கையில் மதிய உணவுத் திட்டத்தில் சமையல் காரர்களுக்கும், மாணவர்களுக்கும் ஆதார்டு கார்டு கட்டாயமாக்கப் படுகையில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து விடும் வாய்ப்பு உள்ளது. எனவே மத்திய அரசு மதிய உணவுத் திட்ட பலன் பெறும் மாணவர்களுக்கு ஆதார்டு கார்டை கட்டாயமாக்கி அரசுப் பள்ளிகள் மாணவர்களை இழக்க மத்திய அரசே காரணமாகி விடக் கூடாது என்றும் அவர் விவாதித்தார்.