எழுச்சி!
ரத்தன் தாக்கூர், ஜம்மு... புல்வாமாவில் நேற்று பாகிஸ்தான் ஜெய்ஷ் ஏ முகமது பயங்கரவாத அமைப்பு நிகழ்த்திய ஆயுதத் தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் ராணுவ வீரர். அவரது இறப்புச் செய்தி கேட்டு கதறிக் கொண்டிருந்த நிலையிலும் ரத்தன் தாக்கூரின் தந்தை கூறிய எழுச்சி மிகுந்த வார்த்தைகள் அங்கிருந்தோரிடையே தேசபக்தியை ஊக்குவிப்பதாக இருந்ததோடு பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையிலும் இருந்தது.
இந்தத் தாக்குதலுக்கான தகுந்த பதிலடியை பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு இந்திய ராணுவம் நிச்சயமாக அளிக்கும். அவர்கள் நிச்சயமாக இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.
இதனாலெல்லாம் நாம் வீழ்ந்து விட மாட்டோம். ஒரு மகனை இழந்து விட்டேன் என்பதால் நான் ஓய்ந்து விட மாட்டேன். தாய்நாட்டுச் சேவைக்காக எனது இன்னொரு மகனையும் அனுப்பத் தயாராக இருக்கிறேன். என்று அந்தத் தந்தை தன் இழப்பினூடே கதறிய காட்சி காண்போரை நெக்குருக வைப்பதாக இருந்தது.
ஜம்முவில் இருந்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 2,500 வீரர்கள் 78 வாகனங்களில் ஸ்ரீநகரை நோக்கி வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தனர. அந்த வாகனங்கள் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, மிக சக்தி வாய்ந்த வெடிபொருள் நிரப்பிய காரை பயங்கரவாதி ஓட்டி வந்து,பேருந்து ஒன்றின் மீது மோதி வெடிக்கச் செய்தார். இதில் அந்தப் பேருந்து உருக்குலைந்தது. வீரர்கள் பயணம் செய்த வேறு சில பேருந்துகளும் பாதிப்படைந்தன.
இந்தக் கொடிய தாக்குதலில் 44 வீரர்கள் பலியாகினர். காயமடைந்த 36 வீரர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.