இங்கிலாந்து கால்பந்து அணி வீரர்கள் குறித்த இனவெறி கருத்துக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புக்கிடையே யூரோ கால்பந்து இறுதி போட்டியில் இங்கிலாந்து, இத்தாலி அணிகள் நேற்று மோதின. பரபரப்பான ஆட்டத்தில், பெனால்டி ஷூட் அவுட் முறைப்படி இத்தாலி அணி 3 - 2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
மார்கஸ் ராஷ்போர்ட், ஜடோன் சாஞ்சோ, புக்காயோ சாகா ஆகிய மூன்று இங்கிலாந்து வீரர்கள் பெனால்டி ஷூட் அவுட்டின்போது கோல் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். இதனைத் தொடர்ந்து, வீரர்களை விமர்சிக்கும் விதமாக ரசிகர்கள் சிலர் சமூகவலைதளங்களில் இனவெறி கருத்துகளை தெரிவி்த்தனர்.
இதனை கண்டித்த போரிஸ் ஜான்சன், வீரர்கள் கதாநாயகர்களாகக் கொண்டாடப்பட வேண்டுமே தவிர சமூகவலைதளங்களில் இனவெறி கருத்துகளை தெரிவிக்கக் கூடாது என தெரிவித்துள்ளார். இனவெறி கருத்துகளை தெரிவித்தவர்கள் வெட்கப்பட வேண்டும் எனவும் சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.