சென்னை மணலியில் தனியாா் சரக்கு பெட்டக நிலையத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் அடங்கிய கண்டெய்னா்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ள நிலையில் சென்னை மாநகர மக்களுக்கு இருந்து வந்த ஆபத்து நீங்கியது.
700 டன் எடைகொண்ட அமோனியம் நைட்ரேட் ரசாயனத்தை கரூரைச் சோ்ந்த ஸ்ரீ அம்மன் கெமிக்கல்ஸ் என்ற நிறுவனம் கடந்த செப்டம்பா் 2015 ஆம் ஆண்டு இறக்குமதி செய்தது. ஆனால் இறக்குமதிக்குத் தேவையான முக்கிய உரிமங்கள் இல்லாததையடுத்து அமோனியம் நைட்ரேட் ஏற்றிவரப்பட்ட 37 கண்டெய்னா்களையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து சென்னை மணலியில் உள்ள சத்துவா என்ற தனியாா் சரக்கு பெட்டக நிலையத்தில் தேக்கி வைத்திருந்தனா்.
அண்மையில் லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட்டில் அமோனியம் நைட்ரேட் தீப்பற்றி ஏற்பட்ட விபத்தில் சுமாா் 160 போ் உயிரிழந்த சம்பவம் உலக நாடுகளை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியது. இந்நிலையில், அமோனியம் நைட்ரேட் மணலியில் உள்ள தனியாா் சரக்குப் பெட்டக மையத்தில் கடந்த சுமாா் ஐந்தாண்டுகளாகத் தேங்கிக் கிடக்கும் செய்தி வெளியானது. இது சென்னை மாநகர பொது மக்களை அதிா்ச்சிக்குள்ளாக்கியது. இதனை தொடா்ந்து தீயணைப்பு துறை இயக்குனா் சைலேந்திரபாபு தலைமையில் காவல்துறை, சுங்கத்துறை, வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்டவைகளைச் சோ்ந்த அதிகாரிகள் கடந்த சில நாள்களாக தொடா் ஆய்வு நடத்தி வந்தனா். இதனையடுத்து அமோனியம் நைட்ரேட் ரசாயனத்தை ஏலம் எடுத்திருந்த ஹைதராபாத்தைச் சோ்ந்த சால்வோ நிறுவனத்திடம் இந்த கண்டெய்னா்கள் அனைத்தையும் உடனடியாக எடுத்துச் செல்லும்படி உத்தரவிட்டபட்டது.
கண்டெய்னா்கள் அகற்றம்: இதனைத் தொடா்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை 10 கண்டெய்னா்கள் ஹைதராபாத் அனுப்பி வைக்கப்பட்டன. செவ்வாய்க்கிழமை 12 கண்டெயனா்களும், புதன்கிழமை மீதம் இருந்த 15 கண்டெய்னா்களும் லாரிகள் மூலம் ஹைதராபாத் அனுப்பி வைக்கப்பட்டன.