பூனம் பாண்டேவை பலிகொண்ட கருப்பை வாய் புற்றுநோய்: யாருக்கு வரும்?

ஹிந்தி திரைப்பட நடிகை பூனம் பாண்டே கருப்பைவாய் புற்றுநோய் பாதித்து சிகிச்சைபெற்று வந்த நிலையில், வியாக்கிழமை இரவு உயிரிழந்தார்.
பூணம் பாண்டே
பூணம் பாண்டே


ஹிந்தி திரைப்பட நடிகை பூனம் பாண்டே கருப்பைவாய் புற்றுநோய் பாதித்து சிகிச்சைபெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார்.

அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டகிராம் பக்கத்தில்தான் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கருப்பைவாய் புற்றுநோய்க்கு பலியானதாகவும், இந்த துக்ககரமான நேரத்தில், அவரது இறப்பின் துயரை பகிர்ந்துகொள்வதாகவும் குறிப்பிடப்படிருந்தது.

மிக இளம் வயதில், நடிகை ஒருவர், கருப்பைவாய் புற்றுநோய்க்கு பலியாகியிருக்கிறார். நேற்று மத்திய பட்ஜெட்டில் கருப்பைவாய் புற்றுநோய் பாதிப்பைத் தடுக்கும் வகையில் 9 முதல் 14 வயது வரையுடைய சிறுமிகள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை மத்திய அரசு ஊக்குவிக்கும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இன்று, பூனம் பாண்டேவின் மரணம் தொடர்பான செய்தி வெளியாகி அதிர்ச்சியை அதிகரித்துள்ளது.

 உலக மக்கள்தொகையில் 16 சதவீத பெண்கள் இந்தியாவில் உள்ளனா். ஆனால், உலக அளவில் ஏற்படும் கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பில், மூன்றில் ஒரு பங்கு பாதிப்பு இந்தியாவில் ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, இந்தியாவில் ஆண்டுக்கு 80,000 பெண்கள் கருப்பை புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாவதும், அவா்களில் 35,000 போ் உயிரிழப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

கருப்பைவாயும், யோனியும் இணையும் இடத்தில் உருவாகும் செல்பெருக்கமே கருப்பைவாய் புற்றுநோயாக உருவாகிறது. இந்த கருப்பைவாய் புற்றுநோய் தொடர்பான விவரங்களை அறிந்துகொள்வதும், அறிகுறிகள், சிகிச்சைகளை தெரிந்துகொள்வதும் அவசியமாகிறது. இது முன்கூட்டியே அறிந்துகொண்டு சிகிச்சையைத் தொடங்கினால் உயிர்பிழைக்கும் வாய்ப்பு இருப்பது சாதகமானதாக இருந்தாலும், பெரும்பாலும் இந்த நோய் முற்றிய நிலையிலேயே கண்டறியப்படுவதால் உயிரிழப்பு அதிகமாக இருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

சில அறிகுறிகள்..
கருப்பைவாய் புற்றுநோய் பெரும்பாலும் ஆரம்பநிலையில் எந்த அறிகுறியும் காட்டுவதில்லை. எப்போது புற்றுநோய் முற்றும் நிலையை அடைகிறதோ அப்போதுதான் அது அறிகுறியை காட்டத் தொடங்கும். ஆனால், சிகிச்சை எடுத்தும் பலனளிக்காத நிலையில், நோயாளி மரணத்தைத் தழுவும் துயரம்நிகழ்கிறது.

சில நிகழ்வுகளில் லேசான அறிகுறிகளைக் காட்டலாம். ஆனால் அதனை கவனித்து உடனடியாக பரிசோதனை செய்துகொள்வது அவசியம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

அசாதாரண ரத்தப் போக்கு.. மாதவிடாய் அல்லாத நாள்களிலும் ரத்தப்போக்கு, உடலுறவின்போது அல்லது மாதவிடாய் முடிந்த பிறகும் திடீரென ரத்தப்போக்கு ஏற்படுவது.

வலி.. உடலுறவின்போது அல்லது அதற்கு முன்பு லேசான வலியை உணருதல்.

பிறப்புறுப்பிலிருந்து வெளியேறும் திரவத்தில் நிறம் உள்ளிட்டவற்றில் ஏற்படும் மாற்றம் போன்றவை அறிகுறிகளாகும்.

மேலும், பெண்கள் தங்களது பிறப்புறுப்பு உள்ளிட்டவற்றில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக் கூட கவனத்தில் எடுத்துக் கொண்டு மருத்துவ உதவியை நாடுவது, நல்லது. அறிகுறிகள் தென்பட்டதுமே சிகிச்சைஎடுத்தால் கருப்பைவாய் புற்றுநோயை குணப்படுத்தமுடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

தடுப்பது எப்படி? எச்பிவி வைரஸை தடுக்கும் தடுப்பூசிகள் வந்துவிட்டன. குறிப்பாக, கருப்பைவாய் புற்றுநோய் வராமல் தடுக்கும் தடுப்பூசிகளை பெண்கள் உரிய வயதில் போட்டுக் கொள்ளலாம்.

தற்போது சீரம் நிறுவனத்தின் கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியான ‘சொ்வாவாக்’ தனியாா் சந்தையில் ஒரு தவணைக்கான தடுப்பூசி ரூ. 2,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எம்எஸ்டி பாா்மசூட்டிக்கல்ஸ் நிறுவனத்தின் ‘காா்டாசில் 4’ தடுப்பூசி ரூ. 3,927-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கருப்பைவாய் புற்றுநோய்க்கான தடுப்பூசிகள்  சிறுமிகளுக்குப் போடப்படுகிறது.  தவறும்பட்சத்தில், ஆண்டுக்கு ஒரு முறை பாப் ஸ்மியர்ஸ் எனப்படும் கருப்பைவாய் புற்றுநோய்க்கான மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளலாம்.  ஆணுறை உள்ளிட்ட பாதுகாப்பான உடலுறவு முறையை கையாளலாம். நல்ல ஆரோக்கியமான, நோய் எதிர்ப்புச் சத்துகளை அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். நல்ல உணவுகளை சாப்பிடாவிட்டாலும், நோய் எதிர்ப்புச் சக்தியை குறைக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் இருக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com