புதுவையில், ஏடிஎம் மையத்தில் முதியவருக்கு உதவி செய்வது போல நடித்து அவரது அட்டையை திருடி ரூ.76 ஆயிரம் வரை மோசடி செய்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
புதுவை பாக்கமுடையான்பேட் பிரதான சாலையில் வசிப்பவர் சேஷாச்சலம் (64). பாரதி மில்லில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சில நாள்களுக்கு முன்பு முதலியார்பேட்டை கடலூர் சாலையில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்துக்கு சென்று பணம் எடுக்க முயன்றார். இயந்திரத்தை அவருக்கு சரியாக பயன்படுத்த தெரியவில்லை. அப்போது அங்கு வந்த ஒரு நபர் சேஷாச்சலத்துக்கு உதவி செய்வது போல நடித்து ரகசிய எண்களை தெரிந்து கொண்டுள்ளார்.
பின்னர் ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு அந்த நபர் சென்றுவிட்ட நிலையில், சில தினங்களுக்கு முன்பு வங்கிக்குச் சென்று தனது கணக்கில் இருப்பு விவரத்தை சேஷாச்சலம் ஆய்வு செய்துள்ளார். அப்போது தனது ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி பல்வேறு ஏடிஎம் மையங்களில் இருந்து சுமார் ரூ.76 ஆயிரம் எடுத்திருப்பது தெரியவந்தது.
வங்கி அதிகாரிகளிடம் சென்று தன்னிடம் இருந்த ஏடிஎம் அட்டையை காட்டியபோது அது வேறு நபருடையது என்பது தெரியவந்தது. பணம் எடுக்க உதவி செய்த நபர், ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்து மோசடி செய்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து முதலியார்பேட்டை காவல்நிலையத்தில் சேஷாச்சலம் வெள்ளிக்கிழமை புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணையில் சேஷாச்சலத்திடம் மோசடி செய்தது கோபிசெட்டிபாளையத்தில் மற்றொரு ஏடிஎம் மோசடி தொடர்பாக கைதான இளையராஜா என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்ய போலீஸார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.