வாஷிங்டன்: மிக மிக மோசமான இரு வாரங்களைச் சந்திக்கப் போகிறோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிரம்ப், அமெரிக்காவில் வெகு வேகமாக கரோனா தொற்ரு பரவிவரும் நிலையில், இந்த இரு வாரங்களும் வலி மிகுந்ததாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் கரோனா தொற்றால் 2 லட்சத்து 40 ஆயிரம் உயிரிழக்க நேரிடலாம் என்று ஏற்கெனவே அதிபர் அலுவலகம் அச்சம் தெரிவித்துள்ளது.
கரோனாவை ஒரு கொள்ளை நோய் (பிளேக்) என வர்ணித்த டிரம்ப், "ஒவ்வொரு அமெரிக்கரும் நம் முன் காத்திருக்கும் கடினமான நாள்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டார்.
கரோனாவிலிருந்து தப்பிக்கத் தனித்திருப்பது மட்டுமே ஒரே வழி என்ற நிலையில் பல வகையான ஊரடங்கு நிலைகளை அமெரிக்கா நடைமுறைப்படுத்தி வருகிறது.
"கரோனாவிலிருந்து தப்பிக்க எவ்வித மாய மருந்தோ சிகிச்சையோ இல்லை, ஒவ்வொருவரும் நடந்துகொள்வதில்தான் இருக்கிறது. நம்முடைய நடத்தையின் மூலம் மட்டும்தான் அடுத்த 30 நாள்களில் கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்" என்றும் கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பாளர் டெபோரா பிர்க்ஸ் குறிப்பிட்டுள்ளார்.